Monday, June 6, 2016

காசோலை (Cheque)

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

வங்கிக் கணக்கில், தொகைக்கான இருப்பை நிலுவையில் வைத்துவிட்டுத்தான் காசோலை எழுதப்பட வேண்டும் என்பது பொது விதி. ஆனால், விதிக்கும், நடைமுறைக்கும் இடையே பல வேறுபாடுகள் நிலவுகின்றன.

வங்கியில் செலுத்தப்படும் சில காசோலைகள், பல காரணங்களுக்காக உரியவர் கணக்கில் வரவு வைக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றன.
காசோலைக்கான தொகையை அளிப்பதை நிறுத்தி வைக்கும்படி (Stop payment order of cheque) ஆணை, மூன்று மாதங்களுக்கு முன் தேதியிட்ட காலாவதியான காசோலை (Stale cheque), பின் தேதியிட்ட காசோலை (Post dated cheque), கையொப்பத்தில் வேறுபாடு (Signature difference) போன்ற காரணங்களுக்காக, பொதுவாக காசோலை திருப்பி அனுப்பப்படலாம்.
இவைதவிர, வங்கிக் கணக்கில் போதிய நிதி இல்லை (Insufficient funds) என்ற காரணத்திற்காக காசோலை திருப்பி அனுப்பப்பட்டால், அந்தக் காசோலையை வழங்கியவரின் பேரில், ஏமாற்று உள்பட பல சந்தேகங்கள் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பண இழப்பீட்டைத் தவிர்க்க, காசோலையை வங்கியில் செலுத்தியவர், சில பரிகார நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வங்கிக் காசோலைகளுக்கான செயல்பாடுகள் Negotiable Instruments Act மூலம் வரைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டத்தின் 138-ஆவது பிரிவின்படி, வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை வழங்குவது "கிரிமினல்' குற்றமாகக் கருதப்பட்டு, அம்மாதிரி காசோலை வழங்கியவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.

நிதி இருப்பு பற்றாக்குறையால் (Insufficient balance) காசோலை திரும்பினால், அது திரும்பிய 30 நாள்களுக்குள், அந்தக் காசோலை வழங்கியவருக்கு அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும்.

அந்த அறிவிப்பில், காசோலை தொகை 15 நாள்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். அறிவிப்பு பெறப்பட்ட 30 நாள்களுக்குள் பணம் செலுத்தப்படவில்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அறிவிப்பு காலாவதி தேதியிலிருந்து 30 நாள்களுக்குள், காசோலை கொடுத்தவர் மீது கிரிமினல் குற்றம் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால், சட்டத்திலுள்ள சில ஓட்டைகளைப் பயன்படுத்தி, பல ஏமாற்றுக்காரர்கள் தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

தற்போதுள்ள நடைமுறையின்படி, பாதிக்கப்பட்ட நபர், வழக்கு தொடுக்க நினைத்தால், காசோலை வழங்கிய நபர் வசிக்கும் நகருக்குச் சென்று, அங்குள்ள நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடுக்க முடியும். அலைச்சலைத் தவிர்க்க பலர், வழக்கு தொடுப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டும் வழக்கு தொடுக்காதவர்கள் 18 லட்சம் பேர்களுக்கும் அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தக் குறைகளைப் போக்குவதற்கு மத்திய அரசு, சமீபத்தில் ஓர் அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, காசோலை செலுத்தப்பட்ட வங்கி இருக்கும் நகரத்திலேயே, பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடுக்கலாம்.
ஒரே நபர் அளித்த பல காசோலைகள், பல நகரங்களில் உள்ள வங்கிகளில் செலுத்தப்பட வேண்டியிருந்தாலும், அந்தக் காசோலையைப் பெற்ற நபர், தனக்கு சவூகரியமான நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.

பொருள் மற்றும் சொத்துப் பரிமாற்றத்தின்போது, காசோலைக்கான தொகை கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகே பரிமாற்ற நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதை தொடர்புடையவர்கள் மனதில் கொண்டு செயல்பட்டால், ஏமாற்றுக்காரர்களின் தந்திரங்களிலிருந்து தப்பிக்கலாம்.

காசோலை, வியாபார உலகில் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் சாதனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமாகும்.

செல்லாத காசோலை வழங்கப்பட்டால், அதற்குரிய சட்ட நிவாரணம் என்ன?

அனைத்து வங்கிகளும், செல்லுபடியாகாத காசோலையுடன் சேர்த்து, ஒரு ‘Cheque  Return Memo’வும், காசோலை Dishonour ஆனதற்கான விளக்கமும் அளிக்கின்றன. உங்களிடம் காசோலை இருந்தால், உடனடியாக காசோலை வழங்கியவருக்கு தகவல்தெரிவியுங்கள். அந்தக் காசோலையை மூன்று மாதத்திற்குள் மீண்டும் வங்கியில் கொடுக்கலாமா என்று அவரிடம் கேளுங்கள். காசோலை இரண்டாம் முறையும் bounce ஆனால், நீங்கள் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்கலாம். முதல் நடவடிக்கையாக, CR memo கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் நீங்கள் காசோலை தந்தவருக்கு சட்ட தகவல் (legal notice) அனுப்பலாம். அந்த தகவல் அறிக்கையில் சகல தகவல்களையும் குறிப்பிட வேண்டும். முதல் தடவை காசோலை Bounce ஆன செய்தியையும் குறிப்பிட வேண்டும். இந்த Notice கிடைத்த தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் காசோலைக்காரர் அந்தக் தொகையைக்கட்டி வைக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் தொகையை வங்கியில் கட்டவில்லை என்றால், நீங்கள் Magistrate Court இல் புகார் மனுதாக்கல் செய்யலாம். 15 நாள் கெடு முடிந்து அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் இந்த வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இது செய்யப்படாவிட்டால், இந்த வழக்கு காலம் கடந்த வழக்காகக் கருதப்பட்டு, நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படும் வாய்ப்பை இழந்துவிடும்.

உங்கள் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, ஏமாற்றியவருக்கு 2 வருட சிறைத்தண்டனை கிடைக்கும். மேலும், காசோலைத் தொகையைப் போல இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும். காசோலைக்காரர், தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள், இந்த ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.

வாடகை காசோலை bounce ஆனால்:-_

பொதுவாக வீட்டு உடமையாளர்கள், வாடகைக்காரர்களிடமிருந்து, (post & dated cheques) பின் தேதியிட்ட காசோலைகள் பெறுவது வழக்கம். வாடகைக் காசோலை, வங்கியிடமிருந்து திரும்ப வந்தால், வீட்டுக்காரர், மேலே, பதிவு செய்யப்பட்ட வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.

சில சமயங்களில், வாடகைக்காரரிடம் போதுமான தொகை இல்லாமல் இருக்கும். வீட்டுக்காரர் சரியான நேரத்தில் காசோலையை வங்கியில் தாக்கல் செய்யாமல் இருந்திருக்கலாம். எனவே, வீட்டுக்காரர் வாடகைக்காரரிடம் முதலில் சட்ட நடவடிக்கைகளைப் பற்றித் தகவல் தெரிவிக்கலாம். அதன் பிறகு நீதியின் படிகளில் ஏறலாம். சில சமயங்களில், வீட்டுக்காரரால் ஏற்பட்ட செலவுகளுக்காக, வாடகைக்காரர் வாடகையிலிருந்து ஒரு தொகையை செலவு செய்திருக்கலாம்.

அந்நிலையில் காசோலை bounce ஆகலாம். வழக்கு தொடரலாம். வாடகைக்காரர் உண்மையை நிரூபிக்க வேண்டும்.

EMI தவணைத் தொகை bounce ஆனால்:_

ஒரு கடனுக்காகக் கொடுக்கப்பட்ட EMI காசோலைகள் bounce ஆனால், வங்கியும், காசோலைக் கொடுத்தவர் மேல் வழக்குத் தொடரலாம். ஆனால், வங்கிகள் இந்த முயற்சியில் பொதுவாக இறங்குவதில்லை. முதலில், அதிக அபராதம் Loan Default Charges, Cheque Bounce Charges - இவை வசூலிக்கப்படுகின்றன.

இந்த கட்டணங்கள் ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இது EMI தொகையுடன் சேர்க்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும், காசோலை கொடுத்தவரின் credit rating பாதிக்கப்படுகின்றது. Secured Loans,- யைப் பொறுத்தவரையில், வங்கிகளுக்கு, Security--க்காக கொடுக்கப்பட்ட ஆவணங்கள், Collateral Security-யாக பணத்திற்குப் பாதுகாப்பளிக்கிறது. பலமுறை ஞாபக மூட்டிய பிறகும், கடன் வாங்கியவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்காவிட்டால், வங்கி போதுமான எச்சரிக்கைத் தகவல் அனுப்பியபின், அந்த security property--யை ஏலத்தில் கொண்டுவந்து, அவர் பெற்றுக்கொண்ட கடன் தொகையை மீட்டுக் கொள்ளலாம்.

ஒரு வர்த்தக உடன்படிக்கையில் காசோலை bounce ஆனால்:_
வியாபாரத்துறையினரிடமிருந்து, நீங்கள் ஒரு காசோலை பெற்றால், அது bounce ஆகும் நிலையில், அவரிடமிருந்து பாக்கியைப் பெறுவதற்கு, நீங்கள் மேற்கூறிய முறையை மேற்கொள்ள வேண்டும்.

வர்த்தகத் துறை உடன்படிக்கைகளில், (bounced cheques) செல்லாக் காசோலைகள் இருக்கும் பட்சத்தில், வர்த்தக சமூகத்தில் பெயர் கெட்டுப்போகும் நிலை உருவாகலாம். இதனால், சமூக அந்தஸ்து பெருமளவில் பாதிக்கப்படும்.

இது பொருளாதார இழப்பீட்டை விட பன்மடங்கு மோசமானது. நீதிமன்றங்களில் செல்லாக் காசோலைகள் தொடர்பான வழக்குகள் இலட்சக்கணக்கில் நிலுவையில் இருப்பதால், மத்திய அரசு Negotiable Instruments Act- இல் பல திருத்தங்களைக் கொண்டுவர உத்தேசித்துள்ளது. இதன் மூலம், நீதிமன்றத்தில் வழக்குகளின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என்று நம்பப்படுகிறது. ஊடகங்களிலிருந்து கசியும் தகவல்கள்படி, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காத defaulter எதிர்காலத்தில் சிறைத் தண்டனை பெறமாட்டார்.

சகல வழக்குகளுக்கும் Lok Adalath மூலமாகத் தீர்வு காணப்படும். இந்தத் திட்டம், சாமானிய மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இதுபோன்ற காசோலைக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. மிகவும் தீவிரமான தண்டனை கொடுத்தால், இத்தகைய குற்றங்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.


மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment