பொருட்களை விலை கொடுத்து வாங்கும் போது
முக்கியமாக கவனிக்க வேண்டியவை எவை?
முதலில் வாங்கும் பொருள் மூலப்படிவமான
பொருள்தானா (Original) என்பதை உறுதி
செய்து கொள்ள வேண்டும். பொருளுடன் அச்சிடப்பட்டு வரும் விவரங்களை படித்து அந்த
பொருளை பற்றிய முழுவதும் தெரிந்து கொள்க. குறிப்பாக மின்சார சாதனங்கள் வாங்கும்
போது ISI போன்று
பொருளுக்கு தரச்சான்று ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து வாங்கலாம்.
அப்படி வாங்கும் பொருட்களின் விலை, தயாரிப்பு
நிறுவனத்தின் பெயர், முகவரி, கஸ்டமர் கேர் நம்பர் இருப்பதை உறுதி
செய்யுங்கள். நவ நாகரீக வளர்ச்சியால் சிறிய நகரங்கள் முதல் சென்னை போன்ற பெரு
நகரங்கள் வரை தொடர் சில்லரை வணிக நிறுவங்கள் (Super Market Chain Stores) செயல் படுகின்றன. அவர்கள் கண்கவரும் வகைகளில்
பொருட்களை அடுக்கி வைத்திருகின்றனர். எனவே நாம் தேர்வு செய்யும் போது பொறுமையுடன்
விபரங்களை பார்வையிட அதுவும் ஒரு வசதியாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வாங்கும் பொருட்களுக்கு தரப்படும் பில் மற்றும் உத்திரவாத சான்று (Guarantee
Card) முதலியவற்றை பத்திரமாக
பாதுகாத்து வையுங்கள். பின்னர் குறை ஏதும் தெரிந்தால் நிவர்த்தி செய்யும்
உத்திரவாதத்தை செயல்படுத்த இது கண்டிப்பாக தேவைப்படும்.
நுகர்வோர் தாம் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிந்து
உடனேயே நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டுமா?
இல்லை. முதலில் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம்
சென்று தாம் கொள்முதல் செய்த பொருளின் குறைபாட்டை எடுத்துக்கூறி சரி செய்து
கொடுக்கும்படி கூறலாம். பெரும்பாலான நிறுவனங்கள் இவ்வாறு புகார் வந்தவுடன் சரியான
பொருட்களை உடன் மாற்றி கொடுத்துவிடுவர். அல்லது நுகர்வோரிடம் பெற்ற விலைக்கான
தொகையோ அல்லது வேறு பொருட்களோ திருப்பி வழங்கிவிடுவார்.
நுகர்வோர் எப்போது நீதிமன்றத்தை அணுக வேண்டும்?
முதலி விற்பனையாளரிடம் நேரிடையாக சென்று முறையிடலாம்.
உற்பத்தி தொடர்பான குறைகள் இருந்தால் சம்மந்த்ப்பட்ட நிறுவனத்திற்கு முதலில்
எழுத்து பூர்வமாக புகார் அளிக்கலாம். உற்பத்தியாளரிடம் நேரடியாக முறையிட்டும்
குறையை நிவர்த்தி செய்யாமல் மறுத்தளித்தல் செய்யும்போது அல்லது தம்முடைய குறைகளை
கேட்காமல் மறுப்பது தெரியவரும்போது மேற்படி பொருள் கொள்முதல் செய்ததற்கான பட்டியல்,
உத்திரவாதம் ஏதும்
அளித்திருந்தால் அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தை
அணுகி தாம் பாதிக்கப்பட்டதை முறையீடு செய்யலாம்.
நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவது எப்படி?
நுகர்வோர் நீதிமன்றங்களை பொறுத்த வரை மற்ற
நீதிமன்றங்களில் இருந்து மாறுபட்டு நுகர்வோர் நலன்களை காக்கும் விதமாக
அமைக்கப்பட்டுள்ளன. எளிமையான நடைமுறைகளுடன். நீதிமன்ற கட்டணங்களும் குறைவே.
பாதிக்கப்ட்ட நுகர்வோர் எளிதில் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெற
வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அவ்வாறு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பும் செயல்பாடும்
என்ன..?
நுகர்வோர் நலனில் அக்கறை கொண்டும், இழப்பீட்டின் மதிப்பீட்டின் முறையிலும் நீதி
மன்றங்கள் மூன்றடுக்கு (Three Tier Structure ) செயல் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் நீதிமன்றங்கள் மாவட்ட அளவில் ”மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”,
மாநில அளவில் “மாநில ஆணையம்”, தேசிய அளவில் ”தேசிய ஆணையம்” என்ற அமைப்பில் செயல்பட்டு வருகிறது.
நுகர்வோர் நீதி மன்றங்களின் வரையறைகள் என்ன?
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும்
அந்தந்த மாநிலங்களின் மாவட்டங்களில் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்
செயல்படுகிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 30 மாவட்ட குறை தீர் மன்றங்கள் உள்ளது.
பாதிகப்பட்ட நுகர்வோர் தனது புகாரில்
கோரப்படும் இழப்பீட்டின் மதிப்பு மற்றும் குறைபாடுள்ள பொருட்களின் மதிப்பு அல்லது
சேவையின் மதிப்பு ரூ 20 லட்சத்திற்கு
உட்பட்டிருந்தால் புகாரினை அதற்குரிய கட்டணத்துடன் மாவட்ட நுகர்வோர் மன்றத்திலும்
(District Consumer Forum) ரூ 20 லட்சத்திற்கு அதிகமாகவும் ரூ 1 கோடிக்கு உட்பட்டும் இருந்தால் அதற்குரிய
கட்டணத்துடன் மாநில நுகர்வோர் நீதி மன்றத்திலும் (State Consumer Disputes
Redressal Commission) ரூ 1 கோடிக்கு அதிகமாக இருந்தால் அதற்குரிய
கட்டணத்துடன் தேசிய நுகர்வோர் நீதிமன்றத்திலும் (National Consumer
Disputes Redressal Commission – NCDRC) வழக்கினை பதிவு
செய்ய வேண்டும்.
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதால்
என்னென்ன நிவாரணம் கிடைக்கும்..?
இந்த வழக்கு சரியானதுதான், நுகர்வோர் குறைபாடுடைய பொருள்/சேவையால் அதிக
பாதிப்புக்குள்ளாகியுள்ளார் என நுகர்வோர் நீதிமன்றம் கருதுமாயின் உடன் கீழ்காணும்
நிவாரணங்களை செய்யும்படி எதிர்தரப்பினருக்கு உத்திரவிடுகிறது.
** குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையை உடனடியாக
அகற்றும்படி கோருதல்.
**குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையால் ஏற்பட்ட
நட்டத்தை ஈடுகட்டும்படி கோருதல்.
**இந்த வழக்கிற்கான செலவு தொகையை வழங்கும்படி
கோருதல்.
**குறைபாடுடைய பொருளுக்கு பதிலாக அதே மாதிரியான
வேறு நல்ல பொருளை வழங்கும்படி கோருதல்.
**பெற்ற குறைபாடுடைய பொருள்/சேவையின் விலையை உடனடியாக
திரும்ப வழங்கும்படி கோருதல்.
**உடனடியாக இவ்வாறான நேர்மையற்ற வியாபார செயலை
மேலும் தொடராமல் நிறுத்தம் செய்யும்படி உத்திரவிடுதல்.
**அபாயம் விளைவிக்கும் பொருள் ஏதும்
சந்தையிடப்பட்டிருந்தால் உடனடியாக அப்பொருட்கள் சந்தையிலிருந்து மீண்டும்
பெற்றுக்கொள்ளும்படி உத்திரவிடுதல் என பலவகையான நிவாரணங்களை பெற முடியும்.
இந்த பதிவு உங்கள் உபயோகமாக இருந்தால் ஷேர்
செய்யவும்
No comments:
Post a Comment